வட மொழி - தமிழ் மொழி

பின் நவீனத்துவம் - பின் புதுமையியல்

அகங்காரம் - செருக்கு,இறுமாப்பு,முனைப்பு,யானெனல்

அகடவிகடம் - குறும்பு,மாற்று,மாறுபட்டது

அகதி - அறவை,வறியன்,எதிலி,புகலிலான்,யாருமற்றவன்,ஏழை

அகந்தை - இறுமாப்பு,செருக்கு

அகம் - உள்ளே,உயிர்,நான்,மனம்,மனநிலை,எண்ணம்

அகம்பாவம் - தற்பெருமை,செருக்கு

அகராதி - அகரமுதலி,அகரவரிசை,அகரநிரல்,அகரமுதல்

அகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை

அகோரம் - அழகின்மை,கொடுமை,நடுக்கம்

அக்கணம் - அப்பொழுது,அந்நொடி

அக்கரம் - எழுத்து

அட்சரம் - அழிவில்லாதது

அக்கியாணி - அறிவிலான்

அஞ்ஞானி - புல்லறிவாளன்

அக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி

அக்கிரமம் - ஒழுன்கின்மை,முறைகேடு

அக்கிராசனம் - முதலிருக்கை,தலைமை

அக்கினி,அக்நி - நெருப்பு,தீ,அனல்,எரி

அங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்

அங்கீகாரம்,அங்கீகரணம் - உடன்,செப்பு

அங்குலம் - விறக்கட்டை,விரலளவு

அசத்தை,அசத்தியம் - பொய்

அசரம்- அசைவில்லாதது,இயங்காதது,நிலையியல்

அசரீரி - வானொலி,உருவற்றது

அசித்து - பயனின்மை

அஜீரணம்,அசீரணம்- செரியாமை,பசியின்மை,அழிவுபடாமை

அசுத்தம் - அழுக்கு,துப்புரவின்மை,தூய்மையின்மை

அசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்

அசெளரியம் - நலமின்மை,இடைஞ்சல்

அஞ்சலி - கும்பிடல்,வணக்கம்

அஞ்சனம் - மை,கறுப்பு,இருள்

அஞ்சிட்டம் - கதிரவன்

அஞ்ஞாதம் - மறைவு,அறியப்படாதது

அஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்

அட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது

அட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்

அட்டபந்தனம் - எண்புறக்கட்டு

அண்டம் - முட்டை,உலகம்,வித்து,மூலம்

அதமம் - கீழ்மை,கடைத்திரம்

அதர்மம்,அதருமம் - தீவினை,அறமின்மை,மறம்

அதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்

அதிகாரி - அலுவலர்,தலைவன்,முதல்வன்,உடையவன்

அதிகாலம் - விடியற்காலம்

அதிகாலை - விடியற்காலம்,புலரிக்காலை

அதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்

அநந்தகோடி - எண்ணத்தொலையாதன

அநந்தம் - அளவின்மை,முடிவில்லது

அநாதை - யாருமற்றவன்,தாய்தந்தையிலான்

அநித்தம்,அநித்தியம் - அழிவு,நிலையற்றது,நிலையாமை

அநீதி - முறைகேடு

அநுக்கிரகம் - அருளிரக்கம்,அருள்

அநுசரணை - சார்பு,சார்பு நிலை

அநுசிதம் - பொய்,தகாதது

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,நுகர்ச்சி

அனுமினம் - ஐயம்,வழியளவை,கருதலளவை

அனுமானப் புரமானம் - கருதலளவை

அநேகர் - பலர்

அந்தகன் - அழிப்போன்,குருடன்

அந்தகாரம் - இருள்,அறியாமை

அந்தக்கரணங்கள் - அகக்கருவிகள்

அந்தஸ்து - நிலைமை,ஒழுங்கு,நிலை

அந்தரம் - வான்வெளி,இடைவெளி,துணையின்மை,காலம்

அந்தி - முடிவு,மாலைக்காலம்

அந்திய கிரியை - இறுதிச் சடங்கு

அந்நியர் - பிறர்,அயலார்

அந்நியோந்நியம் - நெருக்கம்,ஒற்றுமை,ஒருவொருக்கொருவர்

அபயம் - அடைக்கலம்,அச்சமின்மை,புகலிடம்,அஞ்சேலெனல்

அபாயம் - பேரிடர்,அழிவு,கேடு,துன்பம்,இடுக்கண்,இக்கட்டு

அபாரம் - சிறப்பு,அளவின்மை,கேடு

அபிதானம் - பெயர்

அபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்

அபிப்பிராயம் - நோக்கம்,எண்ணம்,உட்கருத்து,உள்ளப்போக்கு

அபிமானம் - பற்று,நேயம்,செருக்கு

அபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்

அபேச்சை -அவா,விருப்பம்

அபேதம் - ஒற்றுமை,வேற்றுமையின்மை,வேறன்மை

அப்பியாசம் -பழக்கம்,பயிற்சி

அப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று

அமரத்துவம் - அழிவின்மை

அமலன் - துயோன்,கடவுள்,வாலறிவன்

அந்நியர் - பிறர்,அயலார்

அதிகம் - மிகுதி,அளவின்மை

அமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை

அமச்ம் - வகை,பங்கு,காலம்,எண்,அன்னப்புள்

அம்பாரம் - குவியல்

அயோக்கியம் - தகுதியினமை,தகாதது

அயோக்க்கியன் - தகுதியற்றவன்,தகவிலான்,கெட்டவன்

அரணியம் - காடு

அருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு

அருத்தம்,அர்த்தம் -பொருள்,பாதி

அருவம் - உருவின்மை,அழகின்மை

அர்த்தநாசம் - பேரழிவு,பொருளழிவு

அர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்

அலங்காரம் - அழகு,ஒப்பனை,அணி,புனைவு

அலச்சியம் - பாராமுகம்,பொருட்படுத்தாமை,கருத்தின்மை

அவகீர்த்தி - இழிவு,புகழின்மை

அவக்கியாதி - வசை,இகழ்ச்சி

அவசரம் - விரைவு,பரபரப்பு,சுருக்கு,பதைப்பு

அவசியம் - முதன்மை,கட்டாயம்,இன்றியமையாமை

அவதரித்தல் - பிறத்தல்

அவதாரம் - பிறப்பு,இறங்குகை

அவதானம் - எச்சரிக்கை,ஒழிவு,நினைவு,விரித்தல்,மறப்பின்மை

அவநம்பிக்கை - நம்ப்பிக்கைக்குறை

அவமரியாதை - முறைதவறல்,வணக்கமின்மை,தீயமுறை

அவமானம் - மானக்கேடு,இழிவு,குறைவு,இளிவரவு

அவயவம்,அவையவம் - உறுப்பு

அவலன் - உடற்குறையன்,வீணன்

அவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,

அற்பம்,அல்பம் - சிறுமை,அணு,புன்மை,இழிவு

அனங்கன் - உடலிலான்,கடவுள்,காமவேள்

அனாதி - கடவுள்,தனியன்,பழமை,தொன்மை

அனுதாபம் - இரக்கம்

அனுபவம் - பழக்கம்,வழக்கம்,அழுந்தியறிதல்,பட்டறிவு

அனுமானம் - உய்த்துணர்தல்,கருதல்ளவை,வழியளவை

அனேகம் - பல,எல்லாம்

அன்னதானம் - சோற்றறம்,சோற்றுக்கொடை,உணாக்கொடை

அன்னம் - சோறு,உணவு,அடிசில்

அன்னியன் - பிறர்,அயலார்

அன்னியோன்னியம் - ஒற்றுமை,நெருக்கம்,ஒருவர்க்கொருவர்

ஆகம் -உடல்,மார்பு

ஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி

ஆகாசம்,ஆகாயம் - விண்,வெளி,வான்,விசும்பு,வர்னம்

ஆகாய விமானம் - வான ஊர்தி

ஆகாரம் - உணவு,அடிசில்,உடம்பு,வடிவு

ஆக்கியாபித்தல்,ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடல்

ஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்

ஆட்சேபம் - மறுமொழி,மறுத்துக்கூறல்,தடைமொழி

ஆங்காரம் - இறுமாப்பு,செருக்கு,தருக்கு

ஆச சங்கை -ஐயம்

ஆசாபாசம் -அன்பு,பற்று,அவா

ஆசாரம் - ஒழுக்கம்,வழக்கம்,நன்னடை,வழிபாடு,துப்புரவு

ஆசியம்,ஹாசியம் - எள்ளல்,நகை,சிரிப்பு

ஆசீர்வாதம் - வாழ்த்துரை

ஆசுவாசம் - இளைப்பாறுகை

ஆசை - விருப்பம்,அவா,பற்று,வேட்கை,விழைவு

ஆச்சரியம் - புதுமை,வியப்பு,இறும்பூது

ஆ(ச்)சிரமம் - இலைக்குடில்,பாழி,முனிவருறயுள்

ஆஸ்திகம் - கடவுளுண்டெனுங்கொள்கை

ஆஸ்பத்திரி - மருத்துவச்சாலை

ஆஞ்ஞாபித்தல் -கட்டளையிடல்

ஆஞ்ஞை -ஆணை,கட்டளை

ஆடம்பரம் - ஆரவாரம்,பகட்டு

ஆட்சேபம்,ஆட்சேபனம் - தடைமொழி,மறுமொழி,எதிர்மொழி,மறுப்பு

ஆதங்கம் - ஆற்றாமை,அச்சம்,நோய்

அந்நியர் - பிறர்,அயலார்

ஆதவ(ப)ன் - பகலோன்,கதிரோன்

ஆதரவு - துணை,உதவி,சார்பு,பற்றுக்கொடு

ஆதி - முதல்,பழமை,அடி,தொடக்கம்,காரணம்,எழுவாய்,கடவுள்

ஆப்தம்,ஆத்தம் - அன்பு,நட்பு

ஆத்தானம்,ஆஸ்தானம் - நகரவாயில்,அறமன்றம்,கொடிமுடிவாயில்

ஆத்திரம்,ஆத்திரியம்,ஆத்திரவம் - உளக்கொதிப்பு,விரைவு,பரபரப்பு

ஆத்துமா,ஆன்மா - உயிர்

ஆந்ந்தம் - இன்பம்

ஆபத்து -இடர்,துன்பம்,இக்கெட்டு,ஊறுபாடு,இடுக்கண்

ஆபரணம் - அணிகலம்,இழை,நகை,அணி,பூண்

ஆபாசம் - அருவருப்பு,சிதைவு,கெடுதல்,பொய்,அளவைப்பொலி

அபூர்வம் - வினைப்பயன்

Wednesday, October 15, 2008

பலிபீடம் பாருக்குள்ளே நல்ல நாடாகும்!


விடிவெள்ளி தெரிகிறது

வந்து பார்


உன் நிலத்தின் பொழியை

நீயே அளந்து கொள்வாய்


நீ உழுது நட்ட பயிர்

கதிரானதும்

நீயே அறுத்து

உன் குதிரில் இடுவாய்


நீ சேர்த்த சொத்து

உன்னோடு இருக்கும்


சொல்லிக்கொள்ளாமல்

அள்ளிக்கொண்டு ஓடும்

நிலை மாறும்


உன் இடத்தில் நீ உலவ

உதவாக்கரை ஒப்புதல்

தேவையில்லை


வேடர்கள் வீழ்ந்து போவர்

வெள்ளி நிலா உலவும்

விண்மீன்கள் சாமரம் வீசும்

வேங்கைகள் நாடாளும்

வீர மறக் கொடி பறக்கும்


தமிழ் வெள்ளம் அருவியாகும்

பாலாறாய்ப் பெருக்கெடுக்கும்


மல்லிகை

மண மணக்கும்

மாஞ்சோலைக்

குயில்கள் கூவும்


வண்ணமயில்

தோகை விரித்தாடும்


உன் பூமியில்

காகம் மட்டுமே கரையும்


ஓலங்கள் ஒழிந்து

ஏலங்கள் குவியும்


துயரங்கள் துடைத்து

துலாபாரம் பெருகும்


கள்ளிச் செடிகளும்

கவி பாடும்


பூங்கொத்துகள்

புன்னகை

பரிமாறிக் கொள்ளும்


தென்றல் மட்டும்

உன்னைத் தீண்டும்


வானவில் உனக்குத்

தோரணம் கட்டும்


மேகங்கள்

பன்னீர் தெளிக்கும்


முல்லைப் பூக்களுக்கும்

முடிசூட்டப்படும்


நீ நாடிய நாடெல்லாம்

உன் நாட்டை நாடும்


பூவரசு

பொன்னரசாகும்


வையம் போற்றும்

வல்லரசாகும்


எள்ளி நகைத்தவர்

ஏமாந்து போவர்


விதைக்காமல்

முளைக் கொட்டும்


பலிபீடம்

பாருக்குள்ளே நல்ல நாடாகும்



Thursday, April 17, 2008

என்று வாழப்போகிறாய் மானத்துடன் மனித இனமாய்...!?

இறுகிப்போன இதயத்தில்

அருகிப்போன குருதி.

தேங்கி நிற்கிறது -நாங்கள் இங்கு

ஏங்கி நிற்கையில்.

தேக்கிய தண்ணீரில்

தீர்ந்து போனது

உன் தாகம் மட்டுமல்ல

மனித நேயமும் தான்.

மணமோடு வாழாவிட்டாலும்

பிணமாக வாழ்ந்தெதைக் கண்டாய்?

சினமும் சீற்றமும்

பிணத்துக்கும் வருமோ?

தண்ணீர் கேட்டால்

வேதனையில் வெந்நீர் ஊற்றும்

வெற்றுக் களிமண் நீ!

தொற்று நோயாய்

எங்கள் வாழ்வில்!

என்றென்றும் வாலாட்டும்

வானரமாய்!

நாளெல்லாம்

நச்சரிக்கும் நரி நீ!

வரிந்து கட்டிக்கொண்டு

நிற்கிறாய் மானம் இழந்து!

இனத்திற்கு மானமுண்டு

பிணத்திற்கு மானமுண்டோ?

என்று வாழப்போகிறாய்

மானத்துடன் மனித இனமாய்...!?



அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

Tuesday, April 15, 2008

வழிந்தோடிய வறட்டு கௌரவம்...!



வழிந்தோடிய வறட்டு கௌரவம்

வழியாத விழிகளும்

வழிமேல்

விழி வைத்தது -அவள்

வருவாள் என.

வந்தவள் -ஒரு

வார்த்தை கூட பேச

வசதியாக மறந்து போக,

வறட்டு கௌரவம்

வழிய போய்

வழிந்துவிட்டு வந்தது.

வழியே வந்தவர்கள் -ஒரு

வழியாய் பார்க்கும் சமயத்தில்...!



அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

Saturday, April 5, 2008

வண்டுகளுக்குக் காத்திருந்த மலர்!

வண்டுகளுக்குக் காத்திருந்த மலர்!

பூவின் இதழ்களைத்

தொட்டுத் தொட்டு

தேனெடுத்த வண்டு

பூவுக்கு வியர்த்திருந்ததால்

வெண் சாமரம் வீசத்

தவறவில்லை

பூவின் இதழ்கள்

சிறகடித்து

வண்டைப் பறக்கச் செய்து

அயல் மகரந்தச் சேர்க்கைக்கு

அனுப்பி வைத்துவிட்டு

அடுத்த வண்டின் வருகைக்காகக்

காத்திருந்தது.



அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

Thursday, April 3, 2008

பூந்தோட்டத்தில் சாதிமல்லிப் பூச்செடிகள்

பத்தியிலே பாத்தி

பந்தியும் உண்டு தண்ணீர்.


தோட்டக்காரன்

இறைக்க இறைக்க குடித்தது

ஒரு சாதிமல்லி.


இறைக்காமல் குடித்துவிட்டு

இளக்காரமாகப் பார்த்தது

இன்னொன்று.


கவலையே படாமல்

இருந்த மற்ற சாதிப் பூச்செடிகளை -வேர்

கரையான் அரித்துத் தின்றது.



அத்திவெட்டி ஜோதிபாரதி

வழியும் குறுக்கீடும்

எனது தடத்தைப்

பார்த்துக்கொண்டு போனேன்

எதிரே வந்தவர்கள்

ஒதுங்கி வழிவிட்டார்கள்.


எதிரே வந்தவர்களைப்

பார்த்துக் கொண்டு

போனபோது,

அவர்கள் எனக்கு

வழி விடவில்லை.


நான் ஒதுங்கிப் போக

வேண்டியதாகிவிட்டது.



அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

Thursday, March 20, 2008

தயக்கத்துக்கு முதல் அடி வைத்தாகிவிட்டது

எட்டு மாதக் குழந்தை

எடுத்தடி வைக்க

நடைவண்டியில்

நடை பயணம்

மகிழ்ச்சி ஆரவாரத்தில்

மருண்டு தள்ளியதால்

வண்டி குழந்தையை

இழுத்துக்கொண்டு நின்றது

அம்மா அப்பாவின்

ஆரவாரத்துக்கிடையே

வைக்காத முதல் அடியை

வைத்தது குழந்தை



அத்திவெட்டி ஜோதிபாரதி

Wednesday, March 19, 2008

விருந்தும் மருந்தும்

வீட்டிற்கு வந்த

ஆசிரியருக்கு

விருந்தோம்ப

ஏதுமில்லை என

வெதும்பிய

கலைச்செல்வன்

அவசரமாகத் தென்னை

மரமேறி இளநீர்

பறிக்கையில்

விழுந்தது இளநீர்

அவனையும் பறித்துக்கொண்டு.


அவசரச் சிகிச்சைப் பிரிவில்

சேர்த்த ஆசிரியர்

பிரியா சோகத்துடன்.


அன்பு மட்டும்

வெளிப்பட்டது

சாரை சாரையாக...!



அத்திவெட்டி ஜோதிபாரதி

சம்மந்திகளின் பிரசவ வேதனை

பிரசவ அறையில்

பிரசவ வேதனையில்

துடித்துக்கொண்டிருந்த பெண்

மருத்துவரையும் தாதிகளையும்

உதைத்தார்.

சாத்தப்பட்ட

அறைக்கு வெளியே

சாந்தமாகக் கணவன்.

ஆண்குழந்தை தான் -இல்லை

பெண்குழந்தை தான் -என

சம்மந்திகளின் சண்டை.

நான் தான்

முதலில் குழந்தையைப்

பெற்றுக்கொள்வேன் என்ற

கூக்குரல் வேறு.

வேண்டாம் வம்பு என்று

வெறுமனே நின்ற

கணவனிடன் கொடுத்து

கைப்பணம் பெற்றுக்கொண்டார் தாதி.

ஆறு மாதத்திலேயே தெரியும்

ஆண் பிள்ளை என்று

அழகாய் உரைத்தார்

குழந்தையின் தந்தை.



அத்திவெட்டி ஜோதிபாரதி

Tuesday, March 18, 2008

செக்குமாடு

செக்குமாடு

கீறல் விழுந்த

இசைத்தட்டு


ஆர வட்டம்

அழியாக் கோலம்


சுகமென நினைத்து

சுற்றிச் சுற்றி


சூடான எண்ணெய்

வழ வழப் பிசுக்குடன்

பிழிந்தாலும் வராது


சுரண்டினாலும்

வராத புண்ணாக்கு

வெல்லம் மட்டும் கேட்டது

செக்கு மாடு



அத்திவெட்டி ஜோதிபாரதி

Friday, March 14, 2008

சறுக்கிய தேசத்திற்கு நறுக்கு வினாக்கள்

தினம் தினம்

கழுகாய் பருந்தாய்

வட்டமிடும்வஞ்சக வானூர்தி

கருவறுக்க

கோழிக்குஞ்சாய்

எம் மக்கள்


இடிமுழக்கம் எங்கு பார்த்தாலும்

ஈழத்தமிழகத்தில் -குண்டுகளை

அள்ளி எரிந்து ஆர்ப்பரிக்கும்

அரக்கர் கூட்டம்


கைக்கெட்டும் தூரத்தில்

எம் உறவுகளின் தாய்த்தமிழ்நாடு


கேட்காமல் கேட்கும்

எம் உறவுகளின் ஓலங்கள்


இவன் வாழும் நாடோ காந்தியின்

அகிம்சை வழி


நேருவின் சமாதனப்புறா-அதுவோ

முதுகில் அடித்தவனை

முழுவதும் தொழும்


தாய்த்தமிழ் நாடென்ற பேர் எதற்கோ?


கூட்டுப் பயிற்சியும்

கொஞ்சிக்குலாவலும்

நம் குல நாசம்

செய்வதற்கேயன்றி வேறெதற்கு?


ரகசியப் பேச்சுக்களும்

ராடார் தளவாடங்களும்

ஒளிவு மறைவற்ற

ஒப்புதல் வாக்குமூலங்களும் -எம்

நலிவடைந்த உறவுகளை

நசுக்கத்தானே?


சமாதானம் என்று சொல்லி

சவ வண்டியனுப்பும்

சறுக்கிய தேசத்தின்

ஆற்றாமைத் தமிழன்

அழுகிறான் இங்கே

அவனுக்கு நாடிதுவே

வேறில்லை அவனியிலே


கண்ணீருக்கு தாழ்ப்பாள் போடும்

கயவர்கள் கூட்டம்

கட்சிக்கொடி ஏந்திக்

கல்லாக்கட்டும்


உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசும்

ஒப்பனைத் தமிழன்

ஒளிரா நிலவு அமாவாசை

உணர்வில்லா உறக்கம் பாவம்

உடுக்கை மானம் உண்டோ அறியேன்...?



அத்திவெட்டி ஜோதிபாரதி

எழில் நிலா இணைய இதழ் 29.03.2008
பதிவுகள் இணைய இதழ் ஏப்ரல் 2008
லங்காஸ்ரீ கவிதைகள் இணைய இதழ் 31.03.2008

Thursday, March 13, 2008

தன்னை மறைத்துக்கொண்ட நிர்வாணம்!

வெள்ளையைப் பார்த்து

வெளிரிப் போனது

தன் நிறம் மறந்து


மஞ்சளைப் பார்த்து

மறைத்துக் கொண்டது -தன்

மகிமையை


கறுப்பைப் பார்த்து

கவிழ்ந்து விட்டது

கடைச் சரக்காகி


சாயம் வெளுத்துக்கொண்டு

மகிழ்ந்திருந்தது

தன்னையே மாற்றிக் கொண்டு

சமூகப் பண்பாடு மறந்த

மாந்தளிர்...!



அத்திவெட்டி ஜோதிபாரதி

வார்ப்பு இணைய இதழ் 31.03.2008
கீற்று இணைய இதழ் 01.04.2008
முத்துக்கமலம் இணைய இதழ் 02.04.2008
பதிவுகள் இணைய இதழ் ஏப்ரல் 2008
லங்காஸ்ரீ கவிதைகள் 18.03.2008

Wednesday, March 12, 2008

நிற்காமல் நின்றுகொண்டு...

பள்ளி விட்டதும்

எங்கும் நிற்காமல்

வீட்டுக்கு வந்துவிடு

அம்மா சொன்னது

மனதில் ஒலித்தது

காத்திருந்தேன் பேருந்துக்காக


இருட்டியதும் வந்தது

பேருந்து இறுமாப்புடன்


இடம் கிடைக்குமா என்ற

ஏக்கத்துடன் படியில்

உந்தி ஏறியதும்

நிற்காமல் பறந்தனர்

நடத்துனரும் ஓட்டுனரும்


மதியம் உண்ட களைப்பில்

மயங்கிப்போய் நான்

இருக்கையில் இருக்க

இடமில்லாமல்

நின்று கொண்டே விழுந்தேன்

தூக்கம் சொக்கியதும்


இடம் வந்ததும்

இறங்கிக்கொண்டேன்

எதுவுமே தெரியாத இருட்டு

இருந்தாலும் கண்டேன்

தெரியாத தெருவும்

எரியாத விளக்கும்

அதற்குத்தான்

தெருவிளக்கென்று பேரோ?

கும்மிருட்டில் காத்திருந்த

சிற்றொளிக் கைவிளக்கு

தம்பி என்று தழுவிக்கொண்டது

என் தாய்.



அத்திவெட்டி ஜோதிபாரதி

வார்ப்பு இணைய இதழ் 03.03.2008
கீற்று இணைய இதழ்

Saturday, March 8, 2008

நெஞ்சு பொறுக்குதில்லையே

வேற்று மொழியில்

பேசிக்கொண்டு வந்த

தமிழர்கள் இருவர்

இடையிடையே

தன் தாய்த் தமிழில்

காய்களை மட்டும்

கடித்துத் துப்பினார்கள்

அக்கம் பக்கத்தினருக்கு

மட்டும் கசந்தது





அத்திவெட்டி ஜோதிபாரதி

Friday, March 7, 2008

பேராசை

ஆஸ்தி உள்ளவனுக்கு

அஸ்தி கரைக்க

அகர வரிசையில்

ஆயிரம் பேர்



அத்திவெட்டி ஜோதிபாரதி

முன்னுக்கு வாருங்கள்

என்னைப் பின்பற்றுகிறவர்களை

எனக்குப் பிடிக்காது

கழுதை




அத்திவெட்டி ஜோதிபாரதி

Thursday, March 6, 2008

மாசமோ மார்கழி மாசம்

பார்த்தேன் ரசித்தேன்

பசுமையானவளை

அவளுக்கு வியர்த்திருந்தது

வெண்பனியோ என்று

நினைத்துக் கொண்டேன்

நான் தொட்டவுடன்

வெட்கப்பட்டாள்

தொட்டாற் சுருங்கி




அத்திவெட்டி ஜோதிபாரதி

Wednesday, March 5, 2008

என்னை மறந்துவிட்டீர்களே?

வேகாத வெயில்

வெந்த தணல்

தண்ணீரே இல்லை

என்னை நினைத்து

எத்தனை கூக்குரல்கள்

ஒரு மழை பெய்ததும் -ஏன்

என்னை மறந்து விட்டீர்கள்?

காவிரிப் பிரச்சனை



அத்திவெட்டி ஜோதிபாரதி

Tuesday, March 4, 2008

சிங்கப்பூர் ஜுரோங் தீவு

சிங்கை ஈன்றெடுத்தக் குழந்தை
சிங்கை இராணுவத்தின் தத்துப்பிள்ளை

மண்ணால் உருவான
மாபெரும் சமுத்திரம்

சிறப்பு அனுமதியுடன் -ஒரு
சிறிய பயணம்

கப்பல் பட்டறைகளின்
கற்பனை உலகம்
கற்பனை செய்ய முடியாக் களப்பணிகள்

சாரக்கட்டுகளில் சறுக்கு விளையாட்டு
கோரம் நடக்கும் என குறி கூட தெரியாமல்

கொடிய வாயுக்களிடம்
குசலம் விசாரிப்பு

எல்லா வேலைகளும் இங்கு கிடக்கும்
எண்ணெய் தொட்டிகளும் இதில் அடக்கம்

வெல்டிங் வேலையும்
விவேக சிந்தனையும்

மின் தூக்கி இல்லா மிடுக்கான பயணம்
பாரந்தூக்கி மட்டுமே இப்போது
நம் பாரத்தை தாங்கி

எறும்புகளாய்
எம் உழைக்கும் வர்க்கம்

எண்ணிலடங்கா எண்ணெய் நிறுவனங்கள்
என்னைப் பிரமிக்க வைக்கும் எழில்

பூங்கா போன்ற காட்சி -அதற்கு
புகை மட்டுமே சாட்சி

ஓசோன் காக்கும் ஆசான் -அந்த
ஒரே நாடு சிங்கை

மாசு இல்லை இங்கு -மண்
தூசு இல்லை எங்கும்

பொருளாதாரப் பொழில் -அது
பொங்கிவரும் எழில்

விசாலமான சாலையில்
வாகனங்கள் மட்டும் காற்றுடன்

வெற்றிடத்தை மட்டும் பார்த்தேன்
வேறு யாரும் அங்கு இல்லை

தீயணைப்பு வண்டிகளின்
தியாக அணிவகுப்பு

அவசர நிலைக்கான
அயராத விழிப்பு நிலை

முதலுதவிக்கான
முன்னேற்பாடு

உழைக்கும் வர்க்கமே
உழலும் சொர்க்கமே

வந்தது நமக்கு வியர்வை -அது
தந்தது நமக்கு உயர்வை

குருதி வருமென்றாலும் -அது
இறுதி அல்லவே

உழைப்பு மட்டுமே உறுதி -நம்
உன்னத வாழ்க்கையைக் கருதி



அத்திவெட்டி ஜோதிபாரதி

வார்ப்பு இணைய இதழ் 10.02.2008
திண்ணை இணைய இதழ் 07.02.2008
கீற்று இணைய இதழ்
தமிழ் சிஃபி சித்திரைச் சிறப்பிதழ் 2008

Friday, February 29, 2008

உல்லாசக் கப்பல்




ஓவியமா அல்லது உண்மையா
ஒரு கணம் அசந்துவிட்டேன்

கடவுச்சீட்டுடன்
கையில் பையோடு

களிப்புடனும் -சில
கற்பனைகளுடனும்

முதல் அனுபவம்
முத்தாய்ப்பாக

நட்சத்திரக் கப்பல்
நற்பயணம்

நுழைவாயிலில்
நல்வரவு வரவேற்பு

கன்னியர்கள் காளையர்கள்
களிப்புடனே

புன்முறுவல் பூத்தார்கள்
நறுமணமும் வீச

படமெடுத்துவிட்டர்கள்
பார்க்காதபோதே

வெள்ளி நிலவு
துள்ளி வரும் நேரம்

வேகமாய் நடந்து
அறை எண் அறிந்து
அழகாய் திறந்தமர்ந்து
அளவளாவினோம்
நிகழ்ச்சிநிரல் கையேட்டுடன்

வழுக்கும் கண்ணாடி
வழவழக்கும் மெத்தை
வண்ண வண்ணத் தரை விரிப்பு

பகட்டை ரசிக்கும் போதே
பயணம் தொடங்கியது தெரியவில்லை

உணவுக்கு ஓரிடமா ஈரிடமா?
நாம் விரும்பும் இந்திய உணவு
நமக்கு பிடிக்கும் சீன உணவு
நமது சாயலில் மலேசிய உணவு
மெச்சும் படி மேற்கத்திய உணவு
சத்துள்ள ஜப்பானிய உணவு

உலகமே இங்கு பணியில்
ஒவ்வொரு நாட்டவரும்
ஒரு தொனியில்

கரீபியன் பாடகர்களின்
கவின் மிகு கானங்களும்

ஆஸ்திரேலிய அழகிகளின்
அரங்கம் நிறை ஆட்டங்களும்

குதிரைப் பந்தையங்களும்
குதூகலங்களும்

சூதாட்டக் கூடத்தில்
சீனர்களெல்லாம் ஐக்கியம்

உற்சாக பானத்துடன்
ஒரு கூட்டம்

அட்டைகள் விளையாட
அட்டைபோல் ஒட்டிக்கொண்டது
ஒரு கூட்டம்

டிஸ்கொத்தே நடனங்களும்
தரை அதிரும் ஆட்டங்களும்

பூப்பந்தாட்டமும்
பூவையர் கூட்டமும்

கூடைப்பந்தாட்டமும்
கோல்ப் விளையாட்டும்

நீச்சல் குளத்தினிலே
நீராடல் உண்டு

இரவுப்பயணத்திலே
எட்டுத்திக்கும் இருட்டு

எட்டிப்பார்த்தால்
எறும்பு போல் படகுகளும்
எங்காவது ஒரு கப்பலும்

நிகழ்ச்சிகளை நெறிபடுத்த
நேரமே கிடைக்கவில்லை

ஓட்டமும் நடையுமாய் -நான்
ஒரு பொழுதும் நிற்கவே இல்லை

எப்படியோ முடிந்து விட்டது
இரண்டுநாள்
எனக்குத் தெரியவே இல்லை

எதுவுமே வாங்கவில்லை
எனக்கு நேரமும் இல்லை



அத்திவெட்டி ஜோதிபாரதி

Thursday, February 28, 2008

நல்ல நாளும் பெரிய நாளும்

புத்தாண்டு வந்தது

பிறந்தநாள் வந்தது

தீபாவளி வந்தது

பொங்கல் வந்தது -அட

அட்சயத் திருதியை கூட வந்தது

அவள் அழுகை மட்டும்

நிற்கவே இல்லை -அவளுக்கு

பொன்னுக்கு வீங்கி!



அத்திவெட்டி ஜோதிபாரதி

Tuesday, February 26, 2008

கூவத்தமிழன் கூவுகிறேன்!

அழுக்குகளின் வாசம்

அவலங்களின் குரல்

கொசுக்களின் இசை முரசும்

கொடுக்காமல் குருதி உறிஞ்சும்

படித்து உரை இல் பிறக்கும் குழந்தை

பார் போற்றும் தலைவர்கள் வரும் பாதை

சிங்காரச் சென்னை எல்லாம் வெறும் போதை -நாங்கள்

சிரமாட்டி கேட்டுக்கொள்ளும் பேதை

சுத்த குடிநீர் இல்லாமல் தவிக்கும் -இந்த

கோலத்தை எந்த நாய் பார்க்கும்

கண் குருடாக இருந்தாலும் தெரியும் -நாற்றம்

கண நேரத்தில் நாசியை பிளக்கும்

தொழிற்சாலை சாரம் இங்கு வடியும்

தூக்கம் இன்றி வாழ எப்படி முடியும்

எட்டிப்பார்த்தால் எல்லாம் மாளிகை

எட்டடி குடிசையில் ஏழைகளின் வாழ்க்கை

சாக்கடை சகதி

அதுதான் எங்கள் வசதி

இந்த வாழ்க்கையே பழகிப்போச்சு

இந்த வாசமே வாழ்க்கையாச்சு



அத்திவெட்டி ஜோதிபாரதி

நன்றி:
திண்ணை இணைய இதழ் 28.03.2008
முத்துக்கமலம் இணைய இதழ் 02.04.2008
பதிவுகள் இணைய இதழ் ஏப்ரல் 2008

Monday, February 25, 2008

வாட்?

வாட்?

ஒரே வரியில் கவிதை தீட்டினேன்

அதற்கு வாட் என்று தலைப்பிட்டேன் -ஆம்

மதிப்பு கூட்டப்பட்ட வரி(VAT - Value Added Tax)



அன்புடன் ஜோதிபாரதி

நானும் வேடந்தாங்கல் பறவை


நானும் வேடந்தாங்கல் பறவை


வக்கா, முக்குளிப்பான், பாம்புதாரா


பெரிய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், கொண்டை நீர்க்காகம்


சின்ன கொக்கு, உன்னி கொக்கு, குருட்டு கொக்கு


செங்குருகு, கம்புள் கோழி, தாழைக்கோழி


நாமக்கோழி, நீர்க்கோழி, மரங்கொத்தி


ஸாண்டு பைப்பர், காமன் டீல், ப்ளூவிங்ட்டு டீல்


பிளமிங்கோ, தூக்கணாங்குருவி, தேன் சிட்டு


கள்ளக்கடையான், கோரைக்கொத்தி - உள்ளான்


காடை, கௌதாரி, கானாங்குருவி - மடையான்


பெயின்டட் ஸ்டார்க், ஓப்பன்பில் ஸ்டார்க், செங்கால் நாரை


காச்சுள், கருங்குயில், புள்ளிக்குயில்


லிட்டில் இக்ரெட், லார்ஜ் இக்ரெட், கேட்ல் இக்ரெட்


மணிப்புறா, மாடப்புறா, பிராமினி கைட்


ஆலா,செந்நாரை, நத்தை கொத்தி நாரை


மைனா, செண்பகம், காதல் சிட்டு


இவர்களோடு நான் மீன் கொத்தி


சைவக்கொக்கு



அத்திவெட்டி ஜோதிபாரதி

Friday, February 22, 2008

ஆடிப்பெருக்கல்ல ஆனந்தப்பட - வெள்ளப்பெருக்கு


ஆடிப்பெருக்கல்ல ஆனந்தப்பட - வெள்ளப்பெருக்கு

இரவெல்லாம் மழை -ஆம்

இடியும் கூட


இரக்கம் இல்லை இந்த வானுக்கு

உறக்கமில்லை எனக்கு


அன்று நட்ட நடவு மஞ்சநேரி வயலில்

விடியும் வரை காத்திருந்தேன்


காலை இரவை தழுவிக்கொள்ளும் வேளையில்

வெளிக்கிட்டேன் வயலுக்கு மண்வெட்டியுடன்


இளங்காடு கடந்து அறை மணி நேரத்திற்குள்

அடைந்தேன் மஞ்சநேரி எல்லையை


எட்டிப்பார்த்தால் எங்கும் வெள்ளக்காடு

சொல்லி மாளாது என் வேதனையை துயரை


தூரத்து வாய்க்காலில் ஆங்காங்கே நட்ட நாற்று

மிதந்து வரக்கண்டேன்


வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டேன்

நீயுமா இந்த வெள்ளத்தில் கலக்கவேண்டும் என்று


வயலை நெருங்கினேன் வாய்க்கால் காணேன்

நட்ட நடவு காணேன் வரப்பு காணேன் -அட

நில அளவைக் கல்லையே காணேன்

நிலைகுலைந்து போனேன்


இறங்கினால் இடுப்பளவு நீர்

உணர்ந்துகொண்டேன் ஒரு சாண் பயிரின் நிலையை

பயிரே தெரியவில்லை

வயிறு மட்டும் எரிந்தது

தண்ணீருக்குள்ளேயும்


வாடிய பயிரை கண்டு வாடியவர் வள்ளலார்

இங்கே மூழ்கிய பயிரை கண்டும் வாடினேன்


வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்

இங்கே வரப்பும் பயிரும் தெரியவேயில்லை

நீர் மட்டுமே உயர்ந்து நின்றது


வெள்ளத்தனைய மலர் நீட்டம் மட்டும் தானா?

இங்கே பயிர் நீட்டம் கூடாதா?


தண்ணீரை வரவுக்கு மேல் செலவு செய்ய

முடியாமல் வருந்தினேன்


வடிகால் வெட்டலாம் என்றால்

அதுவும் மிதந்து போகிறது


திரும்பிப் பார்த்தேன்

ஏரிக்கு போய் மதகடைப்போம் என்று


மதகடைப்பதென்றால் பலகை இறக்குவதொடு

சில திரை வைக்கோலும்தேவைப்படும் என்று தெரியும்

இருந்தாலும் சென்றேன் மஞ்சநேரியை நோக்கி


போகும் வழியில் தண்ணீரின் வேகத்தை கண்டேன்

இருந்தாலும் சென்றேன் மனம் தளராமல்

ஏரியை நெருங்கியதும் நொறுங்கினேன்

கரை உடைத்து நீர் புரண்டோடுவதை கண்டு


தனக்கியன்றதையும் இயலாததையும் செய்ய முடியா

சொல்லொணாத் துயருற்றேன்

வீட்டுக்கு பயணித்தேன் -வழியில்

வந்த யாரையும் பார்க்கவில்லை

யாரும் வயலைப்பற்றி கேட்டால்

பதிலுரைக்க வெட்க்கப்பட்டு


மஞ்சநேரி வயல் எப்படி இருக்கிறது?

அம்மா கேள்விக்கு அயர்ந்து போய்

அமர்ந்தேன் சொல்லற்றவனாய்

பதிலுரைத்தேன் கண்ணீர் துளிகளாக


அடுத்தவருடம் பார்த்துக்கொள்ளலாம் என்ற

அம்மாவின் தேற்றுதல் வரிகளுடன்

ஆறுதல் அடைந்தேன்


என் உள்மனசு சொன்னது

எத்தனை முறைதான்

இந்த வரிகளை கேட்டு ஆறுதல் அடைவது என்று…





அத்திவெட்டி ஜோதிபாரதி
சிஃபி தமிழ் 2008 பொங்கல் சிறப்பு மலரில் பிரசுரமாகியுள்ளது

Thursday, February 21, 2008

வலைப்பூ!

வலைப்பூ!

என் பூக்கள்

பூத்த உடனே

சந்தைக்கு வருகின்றன

வியாபாரம் இல்லை

விலை நிர்ணயம் தேவையில்லை

தரகு இங்கு இல்லை

திருப்பி அனுப்பும் பழக்கம் இல்லை

தமிழ்ப் பூக்கள் பயிர்செய்யும்

நானும் விவசாயிதான்!




அத்திவெட்டி ஜோதிபாரதி

Wednesday, February 20, 2008

தொலைத்தேன்

தொலைத்தேன்

தூக்கம் தொலைத்தேன்

துவண்டு தொலைத்தேன்

ஆக்கம் தொலைத்தேன்

அழுது தொலைத்தேன்

மகனைத் தொலைத்தேன்

மகிழ்ந்து தொலைத்தேன்

வீணாய்த் தொலைத்தேன்

வீங்கித் தொலைத்தேன்

மயங்கித் தொலைத்தேன்

மாறித் தொலைத்தேன்

நேரம் தொலைத்தேன்

நெகிழ்ந்து தொலைத்தேன்

நாணம் தொலைத்தேன்

நகைத்துத் தொலைத்தேன்

படிப்பைத் தொலைத்தேன்

பயந்து தொலைத்தேன்

உணவைத் தொலைத்தேன்

ஊக்கம் தொலைத்தேன்

கனவைத் தொலைத்தேன்

கனிவைத் தொலைத்தேன்

நனவைத் தொலைத்தேன்

நைத்து தொலைத்தேன்

பாசம் தொலைத்தேன்

பார்வை தொலைத்தேன்

நேசம் தொலைத்தேன்

நெருக்கம் தொலைத்தேன்

தொலைத்தேன் தொலைத்தேன்

தொலைக்காட்சி பார்த்துத் தொலைத்தேன்



அத்திவெட்டி ஜோதிபாரதி

என் தாய்த்தமிழகமே!

ஈழம் என்பது ஈரநிலம்

அதன் தூரம் தெரியுமா உனக்கு?

பாரம் குறைவதற்குள்

படித்து தெரிந்துகொள்

ஐயம் இருந்தால்

பையத் தெரிந்துகொள்

இனவாடை மறந்தாலும் -உனக்கு

பிணவாடை தெரியாதா?

இதயம் அடைத்ததோ

மூக்கு அடைத்ததோ -அல்லது

இரண்டும் தானோ?

செஞ்சோலைக் குயில்கள் பலியான போது -நீ

பஞ்சாக பற்றாமல் துயில் கொண்டதேனோ?

பாருக்குச் சொல்லாமல் பதுங்கி இருந்ததேனோ?

நடந்தது நடந்தவையாக எண்ணி

நடப்பவை நல்லவையாக மலர

துடிக்கும் இதயம் ஈழம்

என்று துடிக்கட்டும்

நொடிக்கும் விதையும் -நல்

தமிழ் ஈழம் கொடிகட்டும் - தமிழா

இழுக்கு வருவதற்குள் - உன்

அழுக்கு தேய்த்துக்கொள்!



அத்திவெட்டி ஜோதிபாரதி

வணக்கம்!

வணக்கம்!

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும்,
தமிழ் வலை உலக நண்பர்களுக்கும்,
கவிஞர்களுக்கும்,
எழுத்தாளர்களுக்கும்
அன்பு வணக்கம்.
எனது உணர்வுகள்
கவிதையைப் போல்
அவ்வப்போது வெளிப்படும்.
அவைகளை இங்கு
புனையலாம் என்று இருக்கிறேன்.
உங்கள் ஆதரவை நாடுகிறேன்.

வருகின்ற உணர்வுகளைக்
கவிதைகளாய் வைக்காமல்
கொட்டிவிட வார்த்தேடுத்தேன்
இந்த வலைப்பூ,
வையத்து மாந்தர்கள்
வரவேற்பர் என.
நம்பி,
அத்திவெட்டி ஜோதிபாரதி.